சந்திப்பு

சென்ட்டிமென்ட் தொல்லை தாங்க முடியல...!

பயனாளர் தரப்படுத்தல்: / 8
குறைந்தஅதி சிறந்த 

birthday-_2


ஏற்கனவே உங்களுக்கு ´தீப்பொறி பாலா´ பற்றி சொல்லியிருந்தேன். ஞாபகம் இருக்கிறதா? அவனோடு இன்னொரு பாசக்காரப் பையன் இருக்கிறதாக சொன்னேன் அல்லவா? அவன் இன்று என்ன செய்தான் தெரியுமா? "அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று இன்று வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தான். மடல் ரொம்ப அழகாக இருந்தது. இன்னும் ஐம்பதுக்கும் மேல் வாசகர்கள் பிறந்த நாள் வாழ்த்து அனுப்பி இருந்தார்கள். ரொம்ப ஆச்சரியமாக இருந்தது எனக்கு. என் தனிப்பட்ட செய்தியை எங்கும் சொல்லியதில்லையே எப்படி கண்டுப்பிடித்தார்கள் என்று. மெயிலைத் திறந்தால் கே.கே என்னும் என்னுடைய தீவிர வாசகர் ´நாசமாகப் போங்கள்´ என்று நையாண்டியோடு வாழ்த்துச் செய்தியும், படங்களும் அனுப்பி இருந்தார். ரொம்பவும் இரசித்த வாக்கியங்கள் அவை. என்னை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்.

'எப்படித் தெரியும்?´ என்று விசாரித்தேன். கே.கே எப்போதோ ஒரு வாசகர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததை ஞாபகத்தில் வைத்திருந்தேன் என்று விளக்கம் கொடுத்தார்.
இந்த எழவு பிடித்த நாளை நான் என்றும் பிரமாதமாகப் பார்த்ததில்லை. எல்லா நாட்களைப் போலத்தான் இந்த நாளையும் நினைத்திருந்தேன். ஆனால் இம்முறை யாரென்றே தெரியாத வாசகர்களும் ஒரளவு தெரிந்த வாசகரான அமெரிக்காவில் இருக்கும் ப்ரதீப், துபாயில் இருந்து தோழர் கவிமதி பேஸ்புக்கில் பிறந்த நாள் வாழ்த்து அறிவிப்பு செய்திருந்தார்கள். சிங்கப்ரில் இருந்து ராம்ஸ், அமெரிக்காவில் இருந்து செந்தில், வசந்த் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார்கள். யோசித்துப் பார்க்கிறேன்...

நம்மோடு எந்த தொடர்பும் இல்லாதவர்கள் நம் பிறந்த தேதியை நினைவு வைத்து வாழ்த்துக்கள் சொல்கிறார்கள் என்றால் அவர்களிடம் இருக்கும் நேசம் என்பதை சென்ட்டிமெண்ட் பார்ட்டிகள் என்று நையாண்டி பண்ணுவதென்பது என்பது எவ்வளவு கேவலமானது. என் மீதே எனக்கு கோபமாக இருந்தது.  வாழ்த்து சொல்லியவர்களில் பிரபுவை மட்டும் இருமுறை நேரில் பார்த்திருக்கிறேன். சமீபத்தில் தமிழகம் சென்றிருந்த போது பாண்டிச்சேரியில், சீமான், தோழர் கொளத்தூர் மணியுடன் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரபுவை சந்தித்தேன். கூட்டம் முடிந்த போது என்னை நோக்கி ஓடிவந்த இந்த பிரபுவையும் கூட இருந்த 10-பசங்களையும் கண்டு பயந்து போய் செர்ரி....

'அய்யோ உன்னை உதைக்க வருகிறார்கள் போல... வா ஓடிப்போயிடலாம்´ என கையை இழுத்துக் கொண்டு மிரள....

"அக்கா, அக்கா நீங்க தமிழச்சி தானே?"

என்று பிரபு கேட்ட போது, கொஞ்சம் தைரியம் வந்து நான் ஆமாம் என்று சொல்ல...

செர்ரி அவசர அவசரமாக இல்ல.. இல்ல.. என்று பயந்து கொண்டே சொல்ல..

ஏதேது ஏதோ நமக்குன்னு நாளு இரசிகர்கள் இருக்கிறார்கள் போல! அதையும் விட்டுட்டு வருவதா என்று எனக்குள் மனசு கணக்கு போட ஆரம்பித்துவிட்டது.

பிரவும் குழம்பிப் போய், "நீங்க பிரான்சு தமிழச்சி தானே" என்று திரும்பவும் கேட்க...

"ஆமாங்க, நான் தான் சொல்லுங்க.. என்றதும்,

செர்ரி மெதுவாக என்னிடம், "இந்த பசங்கள பார்த்தா பொறுக்கிங்க மாதிரி இருக்கு. வா போயிடலாம்" என அவசரப்படுத்த...

"சும்மா இருப்பா அப்படியே அடிவிழுந்தாலும் அதை வச்சி அரசியல் பண்ணிடுவேன்ல.." நான் நக்கலாக சொல்ல,

தோழர் கொளத்தூர் மணி கூப்பிடுகிறார் என்று இன்னொரு தோழர் அழைக்க...

பிரபு பாவமாக, ´அக்கா.. அக்கா... போன் நம்பரையாவது குடுத்துட்டு போங்கக்கா. நான் பேசனும் அக்கா" என்று கெஞ்ச

செர்ரி, "வா போலாம் கூப்பிடறாங்க" என்று என்னை இழுத்துக் கொண்டு போக...

"அக்கா.. அக்கா... நான் ஆர்ட்டிஸ்டுக்கா, கவிதை கூட எழுதுவேன். உங்கள் எழுத்தை ரொம்ப விரும்பி படிப்பேன். என் மனைவி கூட உங்கள் எழுத்துக்களின் இரசிகை.."

ஏதேதோ ஆர்வமாக பேசிக் கொண்டே போக, அருகில் இருந்த சிலர் ஆட்டோகிராப் கேட்க,

"அக்கா எனக்கும் போடுங்கக்கா.. அப்படியே போன் நம்பரும் குடுங்கக்கா பாவமாய் பேசிக் கொண்டே போனான் பிரபு.

"போன் நம்பரெல்லாம் இல்லங்க.." செர்ரி திருப்பவும் வில்லன் போல் குறுக்கே.

"இருங்க என் செல் நம்பர் தரேன் எழுதிக்குங்க..."

"வேணாம், சொன்னா கேளு. இவனுங்க முழியப் பார்த்தா சரியில்ல.... போன் நம்பரெல்லாம் குடுக்காதே" ப்ரெஞ்ச் மொழியில் பல்லைக் கடித்துக் கொண்டு எச்சரிகை செர்ரியிடம் இருந்து.

"சும்மா இரு இவங்க என்னோட விசிறிங்கப்பா, பொறுக்கின்னு சொல்லாதே.."

"இங்க ஒண்ணு தானே இருக்கு? நீ ஏன் பன்மையில் சொல்ற... ஆகா, கிழிஞ்சிது போ.. இனி உன்னை பிடிக்க முடியாது. இந்த தமிழ்நாட்டுல இவ்ளோ முட்டாள் பயல்களா? உன்னிடம் எல்லாம் ஆட்டோகிராப் கேட்கிறாங்களே.."

"நானா ஆட்டோகிராப் போடுகிறேன் வாங்க வாங்கன்னு மைக் போட்டு கூப்பிடுகிறேன். அவங்க வந்து கேட்கிறாங்க நான் என்ன செய்யறது..."

"அக்கா... அக்கா... போன் நம்பர்!"

மீண்டும் கேட்ட பிரபுவிடம் நம்பர் கொடுத்துவிட்டு தோழர் கொளத்தூர் மணியோடு சென்றேன்.

"என்னங்க தோழர் ஆட்டோகிராப்லாம் கேட்கறாங்க. சங்கடமா இருக்கு.." என்றேன்.

தோழர் சிரித்துக் கொண்டே, "இங்க பாருங்க.. இந்த கூட்டத்தில் தான் எனக்கு முதன்முறையாக கட் அவுட் வைத்திருக்கிறார்கள். நான் இதுவரை எந்த கூட்டத்திலும் கட் அவுட் வைக்க அனுமதித்ததில்லை. இந்த கூட்டத்தில் வைத்துவிட்டார்கள். என் நிலைமை இப்படி"

சில தினங்களுக்கு பிறகு பிரபுவிடம் இருந்து போன் அக்கா... அக்கா... நலமா? அக்கா... அக்கா.. எங்க இருக்கிங்க? அக்கா... அக்கா... எப்ப எங்க வீட்டுக்கு வருவீங்க... அப்போதெல்லாம் சும்மா ம்ம்ம்... போட்டு விட்டு நாளு வார்த்தையில் போனை வைத்துவிடுவேன்.

மீண்டும் மீண்டும் போன் பிரபுவிடம் இருந்து...

அக்கா இப்ப எந்த ஊரு பயணத்துல இருக்கிங்க? எப்ப பாண்டிச்சேரி வருவீங்க? அக்கா இன்னும் 3-நாளுதான் இருக்கு. பிரான்ஸ் போயிடுவிங்க அதுக்குள்ள எங்க வீட்டுக்கு வாங்கக்கா, என் மனைவி உங்கள பார்க்கனும்னு ஆசையா இருக்காங்க..."

பிரபு கேட்ட போது நான் பாண்டிச்சேரியில் தான் இருந்தேன். அவன் குறிப்பிட்ட இடமும் நான் இருந்த இடத்திற்கு அருகிலேயே இருந்ததால் சில தோழர்களுடன் சென்றிருந்தேன். பிரபுவின் மனைவி 7-மாத கர்பிணி. ரொம்ப பிரமிப்பாய் பார்த்தபடி உங்க கவிதைகள் ரொம்ப பிடிக்கும் எனக்கு அதிலும் ´என்னிடம் இருப்பது ஆண்குறி' என்ற கவிதை எனக்கும், அக்காவுக்கும் ரொம்ப பிடிக்கும். நாங்கள் அக்கவிதை குறித்து நிறைய பேசியிருக்கிறோம் என்று மனப்பாடமாக எனக்கு சொல்லி சரிதானே என்றார்.

நான் கவிதை எழுதுவதாக எண்ணியதில்லை அதுவும் நான் எழுதியது எனக்கே மறந்து போய்விடும். நீங்கள் மனப்பாடம் செய்திருக்கிறீர்கள். அக்கவிதை இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது தெரியும் தானே என்றேன் சிரித்துக் கொண்டு.

கொஞ்ச நேரத்திலேயே போய்விட வேண்டும் என்ற தீர்மானத்தோடு சென்றிருந்த நான் அவர்களுடைய இயல்பும், உபசரிப்பும் பிடித்துப்போகவே நிறைய நேரங்கள் அவர்களோடு பேசிக் கொண்டே இருந்துவிட்டேன். விருந்தே நடத்தி விட்டார்கள். இப்படியெல்லாம் மனிதர்கள் இருப்பார்களா என்ன?

அவர்களின் வார்த்தைகளுடன் காணமால் போயிருந்த எனக்கு செர்ரியின் போன் ´என்னாச்சி, என்னாச்சி.. மணியாகிறது வா.. வா.." என்று பயத்தில் பிதற்றிக் கொண்டிருந்த போது தான் இரவு வந்தது உறைத்தது.

இதோ இன்று அக்கா பிறந்தநாள் வாழ்த்து என்கிறான் பிரபு.

செர்ரியிடம் காட்டினேன் பிரபுவின் வாழ்த்து மடலை.

"பார்த்தாயா பிரபுவைக் கண்டு பயந்தாயே. அவன் என்ன செய்திருக்கிறான் பார்..."

ம்ம்ம்.... எதுவும் சொல்ல முடியாமல் போகிறான் செர்ரி.

தமிழச்சி
28.10.2009


 
மேலதிகக் ஆக்கங்கள்...
fbPixel