
"தயோ ரேவ அந்ததம் கிரியோஹாதேவ நதியோஹா யுதந்தரம்தம்தேவ நிர்மிதம் தேசம்ஆரியவர்த்தம் விதுர்புதாஹா..."என்று மனு சொல்வார். அதாவது, இமயமலை விந்தியமலைக்கு இடைப்பட்ட பகுதிதான் தெய்வப்பகுதி. மற்றவை எல்லாம் மிலேச்ச பகுதி. [´மிலேச்சர்கள்´ என்பது காட்டுமிராண்டிகள் என்பதை குறிக்கும் சொல்]
இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலுமே மலைவாழ் மக்கள் இருந்திருக்கிறார்கள். இவர்களுக்கும், சமவெளி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் அறிவு சார்ந்த சிந்தனைகளிலும், பழக்க வழக்கங்களிலும் ஏகப்பட்ட மாறுபாடுகள் உண்டு. மலைவாழ் மக்களின் வாழ்க்கைகள் அந்த மலைப்பகுதிகளிக்குள்ளேயே சுருங்கி விடுகின்றன. மலை வாழ்க்கையை தவிர அவர்களுக்கு சமவெளி பகுதிகளில் வசிக்கும் மக்களோடு இணைந்து வாழ்வது என்பது முடியாத காரியமாக இருந்தது. வாழ்வோ, சாவோ தாங்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்த இடங்களிலேயே சாகும்வரை இருந்து விடுகின்றனர். அதே போல் அவர்கள் வசிக்கும் மலைப்பகுதியின் மேல்பகுதியை தெய்வத் தன்மை உடையதாகவும் கற்பித்துக் கொள்கின்றனர். தங்களை விட உயர்ந்த இடத்தில் தங்களுக்கென்ற கடவுள்கள் வைத்திருக்கும் பழக்கங்கள் எல்லா இன மலைவாசி மக்களிடமும் இருந்திருக்கிறது. மீண்டும் மனு கருத்துக்கு வருவோம்.
இமயமலை விந்தியமலைக்கு இடைப்பட்ட பகுதிதான் தெய்வப்பகுதி என்று குறிப்பிட காரணம் ஆரியர்கள் அப்பகுதியில் வாழ்ந்தவர்கள். அவர்களுடைய கலாச்சாரங்களை விட பூர்வீககுடிகளாக இருந்த திராவிடர்கள் வடக்கு பகுதி வரையில் பரவலாக இருந்திருந்தனர். அவர்களின் தோற்றம் பழக்க வழக்கங்களை காட்டுமிராண்டிகள் என்றும், அவர்கள் மனிதர்களை விட இழிவானவர்களாகவும் கருதப்பட்டு தங்களுக்கு அடிமைகளாக வைத்திருக்கவும், தங்கள் கட்டளைகளுக்கு எதிராக இருப்பவர்களை கொன்றும், அவர்கள் வாழ்ந்த இடங்களில் இருந்து விரட்டப்பட்டும் கொண்டிருந்தார்கள். தென்னிந்திய மலைவாழ் மக்கள் ஆரியர்களிடம் இருந்து தாங்கள் பாதுகாப்பாக வாழ்வதாக நினைத்திருந்தார்கள். தென்னிந்திய மலையில் தொடர்ச்சியாக ஏழு குன்றுகள் உடைய மலைகள் இருந்ததால் அந்த இடம் ஏழுமலை என்று அழைக்கப்பட்டது. தற்போது இருக்கும் மலைக்குன்றுகளை விட பழங்காலத்தில் மிகப் பெரிய அடர்ந்த காடுகளும் வனவிலங்குகளுக்கும் மத்தியில் மலைவாழ் மக்கள் அக்குன்றுகளில் வாழ்ந்தனர்.
காடுகளில் மரங்களில் இருந்த பழங்களும், காட்டு விலங்குகளும் தான் உணவு. தின்னது போக நிம்மதியாக வாழ்ந்தோமா, இருந்தோமா என்று அம்மக்களால் இருக்க முடியவில்லை. திடீர் திடீரென எங்கிருந்தோ வரும் மிருகங்கள் தங்களை அடித்துக் கொல்வதும், தாக்குவதும், இருட்டில் விஷ ஐந்துக்கள் கடித்து சாவதும் காரணம் தெரியாமல் இருட்டின் மீது பயத்தை கொடுத்தது. "பயம் தான் மனிதனுக்கு கடவுளைக் கண்டுப்பிடிக்க வைத்தது" என்பார்கள். இந்த மலைவாழ் மக்களும் தங்கள் இனத்திற்கென்று கடவுளாக சூரியனை கும்பிட ஆரம்பித்தார்கள். பகல் வெளிச்சமும், வெட்பமும் தங்களுக்கு பாதுகாப்பான உணர்வை கொடுத்ததால் வானத்தை பார்த்து சூரியனை வணங்க ஆரம்பித்தார்கள். அடுத்ததாக தங்களை தாக்கும் விலங்குகளையும் வணங்க ஆரம்பித்தார்கள். பிறகு தங்களுக்கு காவலாக இருக்க காவல் தெய்வ முறையில் தங்கள் கடவுளை அமைத்தனர். மலைகளில் இருந்த பாறாங்கற்களைக் கொண்டு அந்த மலைவாசிகள் தங்களைப் போன்ற தோற்றமுடைய உருவத்தை அமைத்தார்கள். அதற்கு பெயர் காளி.
காளி என்றால் கறுப்பு தெய்வம் என்று பொருள். காளிக்கு இரண்டு கைகள். வலது கையை கீழ்நோக்கி காட்டும்படி வைத்து இடது கையை தன்னை நோக்கி தூக்கி உள்ளங்கையை காட்டுவது போல் காளியின் வடிவம். "எனக்கு காலடியில் படையல் இட்டால் உன்னை நான் காப்பேன்" என்பது மலைவாசிகளின் அர்த்தமாக இருக்கலாம். காளிக்கு மலையில் இருக்கும் பூக்களை வைப்பதும், இசையால் தங்களை உற்சாகப்படுத்திக் கொண்டு நடனமிட்டுக் கொள்வதும் அவை பயத்தை போக்கிக் கொள்ளவதற்கான செயலாகவும் [Entertainment] இருந்திருக்க வேண்டும். இதற்கு பின் இதே காளியை மையமாக வைத்து விழாக்களும் எடுக்கப்பட்டன.
பெரும்பான்மையான இனங்களில் முதல் தெய்வமாக உருவாக்குவது பெண் வடிவத்தைத்தான். அதற்கு காரணம் ஆண்கள் குடும்பத் தேவைகளுக்காக பல இடங்களுக்கு அலைந்து கொண்டிருக்க, பெண்கள் தங்கள் குழந்தைகளையும், குடில்களையும் பாதுகாக்கவும், தங்களுக்கு தேவையான உணவுகளை தயாரிப்பதிலும் பெரும்பாலான நேரங்களை செலவிட வேண்டி இருந்ததால் மக்கள் தங்கள் பகுதி பாதுகாப்புக்காக பெண் தெய்வங்களை உருவாக்கினார்கள். அதைப் போலவே மலைவாசிகள் தங்கள் மலையையும் குடும்பத்தையும் தங்கள் இனத்தையும் காப்பாற்றிக் கொள்ள மலைக்காளியை உருவாக்கினார்கள். வேட்டைக்குச் செல்லும் போது ஆண்கள் மலைக்காளியை வழிபடுவதும், வேட்டைக்குச் சென்றுவந்த பின்பு வேட்டையில் கிடைத்த பொருட்களை காளியின் பாதத்திற்கு கீழே படையலிட்டு எடுத்துச் செல்வதும் அவர்களது பழக்கமானது.
இப்படி மலைவாழ் மக்களின் பழக்க வழக்கங்கள் பல நூறு வருடங்களாக வெளி மனிதர்களால் இக்குன்றுக்குள் வரமுடியாத வரை மலைவாழ் மக்களின் பழக்க வழக்களில் எந்த கலப்படமும் இல்லை. பலநூறு ஆண்டுகளுக்கு பின் வெளி மக்களான பார்ப்பன இனத்தைச் சேர்ந்தவர்கள் மலைவாசிகளின் கடவுள் வழிபடும் முறைகளைக் குறித்து கேள்வியெழுப்பினார்கள். ´ஆகமம்´ தெரிந்த நாங்கள் கடவுளுக்கு பூசை செய்வதும், காளிக்கு எப்படி சக்தி கொடுப்பது என்பது குறித்தும் எங்களுக்கு தெரியுமாதலால் கடவுள் வழிப்பாட்டு முறையை மாற்றி அதன் பொறுப்புகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று தந்திரமாக ஆரம்பித்தார்கள். சமவெளி பகுதிகளில் வசித்து வந்த மக்களை அவர்களுடைய பண்பாடு கலாச்சாரத்திற்குள் ஊடுருவி அவர்களை அடிமைப்படுத்தியிருந்த பார்ப்பன ஆதிக்கம் மலைவாழ் மக்களிடமும் தன் ஆதிக்கத்தை காட்டியது.மலைவாழ் மக்களுக்கு ஆச்சரியம், பயம். எங்கிருந்தோ மேலே ஏறி வந்து நம் தெய்வத்தை கேட்கிறார்களே என்று. மலைவாழ் மக்கள் பல நூறு ஆண்டுகளான தம்முடைய பழக்க வழக்கத்தை எப்படி விட்டுக் கொடுப்பது என்று அவர்களுக்குள் விவாதம். சிலருக்கு காளிக்கு சக்தி ஏற்றினால் நன்றாக இருக்குமே என்றனர். இன்னும் சிலர் நம் காளியை நம் பழக்க வழக்கப்படிதான் கும்பிட வேண்டும் என்றனர். இவை மலைவாழ் மக்களுக்குள் கருத்து வேறுபாட்டை உருவாக்கியது. காலப்போக்கில் மெல்ல மெல்ல மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தது.
காளிக்கு மாமிசம் படைப்பதை மலைவாழ் மக்களிடம் தடை செய்ய வைத்தனர் பார்ப்பனர். பூக்களை நேரடியாக மக்கள் போடக்கூடாதென்று காளிக்கு ஆகமவிதியில் நாங்கள் வழிபாடு செய்து பூக்களை வைத்துபூஜித்து தருகிறோம் என்று தந்திரமாக பேசி காளியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் பார்ப்பனர். பிறகு காளிக்கு கோவிலும் கட்டப்பட்டது.இதற்கு பின் மலைவாழ் மக்கள் கருவறைக்கு வரக்கூடாது. இது முன்பு இருந்த காளி அல்ல. ´ஆகம´ ரீதியில் சக்தி ஏற்றப்பட்ட காளி என்றும் உரிமை கொண்டாட ஆரம்பித்த போதுதான் மலைவாழ் மக்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்கள். இதற்கும் மேலாக இன்னொரு கூத்தும் நடந்தது காளிக்கு. காளியின் கைகளில் நாகப்பாம்பு பொறுத்தப்பட்டிருந்தது. இனி இது ´ப்ராப கண்டா´ [Famous] இது சைவர்களின் கடவுள் சிவபெருமான். இனி இது காளி கிடையாது என்றனர்.
தங்களை கோவிலுக்குள் விடாமலும் நேரடியாக கடவுளை பூஜிக்கவும் மறுத்த இவர்கள் இன்று பெண் கடவுளை ஆணாக மாற்றி சிவன் என்கிறார்களே என்று ஆவேசம் கொண்டனர். தங்கள் கடவுளை எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் ஆயுதம் ஏந்தி போராட ஆரம்பித்தனர். இங்கேயும் பார்ப்பனர் தந்திரமாக பேசினர். நம் இருவருக்குமே தெய்வத்தால் பலன் கிட்ட வேண்டும். நமக்குள் சண்டை வேண்டாம். இந்த கோவில் மூலமாக உங்களுக்கும் வருவாய் கிடைக்கும். உங்களின் முன்னோர்கள் தொழிலான வேட்டையாடுதல், தேன் எடுத்தல், முடிமழித்தல் போன்றவையில் முடிமழித்தல் தொழிலை இங்கே செய்யுங்கள். இக்போயிலில் சாமி தரிசனத்திற்கு யார் வந்தாலும் உங்களிடம் தலையை மழித்துக் கொண்டுதான் உள்ளே வரவேண்டும். அதற்கான தட்சணையை நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள். உள்ளே என்ன தட்சணை மக்கள் தருகிறார்களோ அதை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம். நம் இருவருக்குமே வருமானம் கிடைக்கும் என்றனர். பார்ப்பனர்களின் பேச்சைக் கேட்டு மலைவாழ் மக்கள் மீண்டும் ஏமாந்தார்கள். அம்பட்டையர்களாக கோவிலுக்கு வெளியே காளியை வழிபடும் உரிமையை இழந்து மொட்டை அடிக்க ஆரம்பித்தார்கள். பார்ப்பனன் கோவிலுக்கு உள்ளே சவுகரியங்களை அனுபவித்தார்கள்.
திருப்பதி ஏழுமலையில் காளியாக இருந்த பெண் சாமி பார்ப்பனர்களால் சிவன் கடவுளாக ஆணாக மாற்றிய சைவர்கள் பற்றிய செய்தி வைணவத்தை சேர்ந்த பக்தர்களுக்கு தெரிகிறது.வைணவத்தை சேர்ந்த ஸ்ரீ ராமானுஜர் காலமான 11-ம் நூற்றாண்டில் அதாவது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய மாமாவாகிய திருமலை நம்பியிடம் இராமாயணம் கேட்பதற்காக திருப்பதிக்கு செல்கிறார். அப்போது தான் மலையில் காளியை சிவபெருமானாக்கி சைவர்கள் வணங்கும் செய்தியை அறிந்துக் கொள்கிறார். தன்னுடன் பல வைணவர்களை அழைத்துக் கொண்டு மலைக்கு செல்கிறார் ஸ்ரீ ராமானூஜர். [திருப்பதி மலையில் வைணவ - சைவர்களுக்கு நடந்த யுத்தம் குறித்து குருபரம்பரை என்ற புனித நூலில் குறிப்பு உள்ளது.]
இனி குருபரம்பரை நூலில் இருந்து யுத்தம் குறித்த நிகழ்வுகளை பார்ப்போம்....
ஸ்ரீ ராமானுஜர் வைணவ கூட்டத்திற்கும், சைவர்களுக்குள்ளும் வாக்குவாதம் நடக்கிறது. ´நாராயணன் தோன்றிய இடம் இது´ சைவர்கள் இடத்தை காலி பண்ணுங்கள் என்று வைணவர்கள் வாதம் செய்தனர்."இல்லை, இவ்விடம் சிவனுக்கு சொந்தமானது. சைவர்களுக்கே சொந்தம். கடவுளின் கைகளைப் பாருங்கள். பாம்பு இருக்கிறது என்று ஆதாரம் காட்டினர்" சைவர். இருவரும் தங்கள் தரப்பு பிரச்சனையை மன்னனான தொண்டமான் என்ற சக்கரவர்த்தியிடம் கொண்டு சென்றனர்.ஸ்ரீ ராமானுஜர் இப்படி வாதப்பிரதிவாதங்கள் பண்ணிக் கொண்டே இருக்கிறோம். இம்மலையில் இருப்பது பெருமாள் என நாங்கள் சொல்கிறோம். சைவர்களோ சிவகிரி என்றார்கள். இப்பிரச்சனையை நாம் பேசி தீர்க்க முடியாது. பகவானே பேசி தீர்க்கட்டும். அச்சிலை பெருமாளா, சிவனா என அவனே சொல்லட்டும் என்கிறார்.ராமானுஜரின் சிஷ்யர்களில் ஒருவர் "எம்பெருமானே பகவான் எப்படி சொல்வார்?" என கேள்வி எழுப்புகிறார்.
ஸ்ரீ ராமனுஜர் சொல்கிறார்: "பெருமானின் முக்கிய ஆயுதங்கள் சங்கு, சக்கரம். சிவனின் முக்கிய ஆயுதங்கள் மான், மழு. இந்த இரண்டு தரப்பு ஆயுதங்களையும் எடுத்து வாருங்கள். அதை கடவுளின் சன்னதியில் விக்ரஹத்தின் பாதத்தில் வைப்போம். இரவு சன்னதியை இழுத்து மூடிவிடுவோம். மறுநாள் சூர்யோதய சமயத்தில் வருவோம். சன்னதியில் விக்ரஹத்தில் சங்கு சக்கரத்தை வைத்திருந்தால் அவர் பெருமாள். மான் மழுவை வைத்திருந்தால் சிவன்."இந்த முடிவுக்கு கட்டுப்படுகிறீர்களா? என கேட்கிறார். அனைவரும் சம்மதிக்கிறார்கள். மலைமக்களுக்கு சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் நடக்கும் சண்டையைக் கண்டு அழுவதா? சிரிப்பதா? என்று முழித்துக் கொண்டிருந்தனர். இரவு சக்கரவர்த்தியுடன் பொதுமக்கள் முன்பு சன்னிதானத்தில் உள்ளே யாராவது இருக்கிறார்களா என்று நன்றாக ஆராய்ந்து பார்க்கப்பட்டு யாரும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்ட பின் பெரிய பூட்டு போடப்பட்டது.
மறுநாள் காலை சூர்யோதயத்தில் மக்கள் ஆவலோடு நிற்க, ஆண்டவன் தீர்ப்பு என்ன என்பதை அறிய பரபரப்பாக கதவு திறக்கப்படுகிறது. தோள்பட்டையில் சங்கு சக்கரத்தோடு நிற்கிறது விக்ரஹம். அதோடு சிவனின் மான், மழு ஆயுதங்கள் சுக்கு நூறாக உடைக்கப்பட்டுக்கிடந்தன. வைணவர்கள் வென்றதாகவும், அந்த விக்ரஹாரம் பெருமாள் எனவும் தீர்ப்பு வழங்குகிறார் மன்னனான தொண்டமான். "அப்பனுக்கு சங்காழி அளித்தவர் ஸ்ரீ ராமனூஜர்" என்ற பட்டப்பெயர் உண்டு.´அப்பன் என்றால் திருப்பதி பெருமாள். அவருக்கே சங்கு ஆழி கொடுத்தவர் ஸ்ரீ ராமனூஜர்´ என்று அர்த்தம்.
இன்னொரு ஆதாரம்: "தர்க்க சமணமும் சாக்கிய பேய்களும் - தாழ்சடையோன்சொற்கற்ற சோம்பரும் சூனியவாதமும்நிற்க குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீ நிலத்தேபொற்கற்பகம் எம் ராமானுச முனி போந்த பின்னே..." என்றொரு பாடல் ´திருவரங்கத்து அமுதனார்´ பாடியிருக்கிறார்."வாதம் பண்ணும் சமணர்களும், புத்தமதம் என்னும் பேய்களும், தாழ்சடையோனாகிய சிவபெருமானின் வழியை பின்பற்றும் சைவர்களும், கடும் சூனியவாதம் பேசுபவர்களும், எல்லாமே பொய் என குறும்பு பேசும் அத்வைதிகளும் செத்தொழிந்தது எங்கள் ராமானுஜர் பிறந்த பிறகு...."என்பது பொருள்.
ஸ்ரீ ராமானுஜர் பற்றி இன்னொரு செய்தியும் உண்டு.
'ஆதிசேஷனின் அம்சம்´ என்று பெருமாள் கூறியதாக வைதீக குறிப்புகள் சொல்கிறது. சரி, எப்படி விக்ரஹத்தின் தோள்பட்டையில் சங்கு வந்தது? தீர்ப்பு அளிக்கப்பட்ட அன்று இரவு ஸ்ரீ ராமானுஜர் ஆதிசேஷனின் அம்சமான பாம்பு வடிவம் எடுத்து விக்ரஹத்துக்கு திருமஞ்சன நீராட்டு வைபவம் நடத்தும் போது அந்த நீர்மம் வெளியேறும் சிறு துவாரமான கோமுகை வழியாக உள் நுழைந்து விக்ரஹத்தின் தோள்பட்டையில் சங்கை சொருகி சிவனின் ஆயுதங்களை உடைத்துபோட்டு விட்டு மீண்டும் கோமுகை வழியாக பாம்பாக மாறி வெளியேறி மறைந்து விட்டார். ஸ்ரீ ராமானூஜர் பாம்பாக மாறிய செய்தி மட்டும் செவி வழி செய்தியாக இருந்தாலும், குருபரம்பரையில் குறிப்பிட்டுள்ள நிகழ்வாக இருக்கிறது. மற்றப்படி ஸ்ரீ ராமானுஜரை வைத்து எழுதிய பாடல்களுக்கு ஆதாரங்கள் இருக்கின்றன. மலைவாசிகளின் பெண் கடவுளாக இருந்த காளி சைவர்களால் சிவனாக ஆக்கப்பட்டு பின் வைணவர்களால் பெருமாளாக ஆக்கப்பட்ட சங்கதிகளுக்கு ஆதாரங்கள் இருக்கின்றன. இருந்தும் பெருமாளாகவே இன்றும் வெட்கங்கெட்டத்தனம் தொடருகிறது என்றால் பார்ப்பனர்கள் ஆன்மீக ஆப்ரேஷன் என்பது எப்படிபட்டதாக இருக்கும்? இந்தளவுக்கு பேசுவதற்கு என்ன ஆதாரங்கள் என நீங்கள் கேள்வி எழுப்பலாம்.
´அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்´ தெரியுமா? கும்பகோணத்தில் அக்னிஹோத்ரம் எனப்படும் யாகத்தைச் செய்த பரம்பரையைச் சேர்ந்த வைணவ குடும்பத்தைச் சேர்ந்த பார்ப்பனர். மகா பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளுடன் திருவெம்பாவை மாநாடுகளில் சொற்பொழிவு செய்தவர். ´Association of Mutts´ என்ற மடங்களில் மகா பெரியவர் தலைவராகவும், இவர் செயலாளராகவும் இருந்தவர். அவர்´இந்து மதம் எங்கே போகிறது?´ என்ற நூலை எழுதிய போது கடுமையான மிரட்டல்களை சந்தித்தவர். 100-வயதை நெருங்கிக் கொண்டிருந்த போது இந்நூலை அவர் எழுதினார்.உண்மையான இந்து மதம் என்பது என்ன? அவை இப்போது வியாபார நோக்கத்திற்காக எப்படி திசைமாறிப் போய் கொண்டிருக்கிறது என்பது உள்பட பல உண்மைகளை வெளிக் கொணர்ந்தவர். அவர் அந்நூலில் 283-ஆம் பக்கத்தில் திருப்பதி வெங்கடாசலபதிக்கு நடந்த ஆன்மீக ஆப்ரேஷன் பற்றி சொல்கிறார்.
இஸ்ரேல் நாட்டில் ஜெருசேலத்தை சேர்ந்த பெண் ஒருவர் இந்திய கோவில்களைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டு நம் இந்தியா வந்திருந்தார். அவர் எம்.எஸ்.சுப்புலஷ்மிக்கு நன்கு அறிமுகமானவர். அவர் திருப்பதி கோவிலுக்கு சென்ற போது என்னையும் அழைத்துச் சென்றார். அவர் மிலேச்ச மதத்தைச் சேர்ந்தவராக இருந்ததால் சிற்சில பராக்கிரமங்களை செய்து தான் கோவில் உள்ளேயே விட்டார்கள். கோவிலின் உள்ளே சென்ற போது கருவறையில் இருந்த வெங்கடாசலப்பதியை உள்ளே சென்று பார்க்க விரும்பினார். கொஞ்சம் சிபாரிசுக்கு பிறகுதான் உள்ளே அனுமதித்தார்கள். அவரோடு உள்ளே சென்ற நானும் பெருமாளை சுற்றி வந்தேன்அப்போதுதானப்பா.... நானும் பார்த்தேன். திருப்பதி பெருமாளுக்கு அழகான பின்னல். தலையை சீவி சிங்காரித்து பின்னல் செய்து போட்டிருந்தார்கள். இப்போது சரியா? அவள் மலைகாளி தான். ரொம்ப ரொம்ப தயக்கத்திற்குப் பிறகு அரை மனதோடு முழு உண்மையையும் உங்களுக்கு சொல்லிவிட்டேன்.
திருப்பதி பெருமாளை இப்போதும் எக்கச்சக்கமான பக்தர்கள் அதிக நம்பிக்கையோடு வணங்கிச் செல்கிறார்கள். அவர்கள் நினைத்ததெல்லாம் நடந்து திருப்பதிக்கு போய் வந்தால் ´வாழ்வில் திருப்பம் சேருமடா´ என்றெல்லாம் போற்றி புகழப்படுகிறது. ஆனாலும்.... திருப்பதியில் என்ன நடக்கிறது? பணம் படைத்த முக்யஸ்தர்கள் என்றால்.... அவர்களை சற்றே கிட்டத்தில் நின்று பெருமாளை தரிசிக்க வைக்கிறார்கள். மற்றவர்களுக்கு 50-ரூபாய் 100-ரூபாய் என.... பெருமாளை பார்க்க கட்டணம் அதுவும் பணம் இல்லாதவர்கள் என்றால் 5-மணி நேம், 8-மணிநேரம், ஏன் 24- மணிநேரம் என நின்று பார்க்க வேண்டிய கட்டாயம்.அதுவும்... பெருமாளுக்கு 15-அடி, 20-அடி முன்னே பக்தர்களை தடுத்து நிறுத்தி, ´அப்படியே போய்க் கொண்டே இரு´ என்கிறார்கள்.இப்படி வர்த்தகக் கடவுளாக மாறிவிட்ட வெங்கடாஜலபதியின் உண்மை நிலையைத்தான் உங்களுக்கு சொன்னேன் என்கிறார் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். சிவனுடன் விஷ்ணுவைக் கோர்த்து மோகினி அவதாரம் எடுக்க வைத்து அய்யப்பனை பிள்ளையாகக் கொடுத்த பார்ப்பனர்களுக்கா பெண் சிலையை ஆணாக மாற்றத் தெரியாது?அய்யோ பாவம் திருப்பதி பெருமாள்! ஆடைக்கு உள்ளே பெண்ணிய அங்கங்களுடன் அவமானப்படுகிறார்.
தமிழச்சி
29.10.2009