தீண்டாமை

தோட்டியும், மலக்குழியும்!

சமீபத்தில் "பீ" என்ற ஆவணப்படம் பார்த்தேன். தமிழ்நாட்டில் மதுரை மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக [மலம் அள்ளுபவர்] வேலை செய்பவர் மாரியம்மாள் நடுத்தர வயதுள்ள பெண். அவரைச் சுற்றி கேமரா செல்கிறது. மதுரையில் இருக்கும் கீழைத் தெரு என்ற இடம் [கோயில் சந்து என்ற பெயரும் உண்டு] ஏதோ கோவிலுக்கு அருகே இருக்க வேண்டும். 

கோவில் மதில் சுவருக்கு பின்புறம் இருக்கும் இடத்தில் தான் மனித மலங்கள் அங்கங்கே கிடக்கிக்கிறது. பிய்ந்து போன கூடையில் இருந்து சாம்பல்களை மலத்தின் மீது தூவி இரண்டு தகடுகளால் வழித்து எடுத்து வாலியில் போடுகிறார் மாரியம்மாள். 

சில மலங்கள் காய்ந்து போய் இருந்ததால் தகடுகளில் அப்படியே ஒட்டிக் கொண்டு வந்து விடுகிறது. ஈரம் உலராத காயாத மலங்களை அள்ளும் போது மாரியம்மாள் கைகளிலும் படுகிறது. அவர் எந்தவித அருவருப்புமின்றி முகம் சுளிக்காமல் மலத்தை அள்ளி பிளாஸ்டிக் வாளியில் வாரிக் கொட்டுவதிலேயே இருக்கிறார். 

உண்மையில் கேமராமேன் மிக க்ளோசப்பில் வைத்து ஷாட் செய்திருக்கிறார். ஏனோ, தானோ என்ற நோக்குடன் கேமரா இருக்கவில்லை. காட்சிகளைப் பார்க்கும் போது மாரியம்மாளாக நாம் மாறிவிட்டதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது. குமட்டலும், அருவருப்புமாக பார்க்கலாமா? வேண்டாமா? என்ற சிந்தனையை உருவாக்கிவிடுகிறது. 

அந்தப்பக்கமாக நேரிலே அந்தக் காட்சியைப் பார்க்கும் சில பெண்களும், பெரியவர்களும் மூக்கைப் பொத்திக் கொண்டு போகின்றனர். இன்னும் சில சிறுவர்கள் கேமராவை பார்த்தபடி மலம் செய்துக் கொண்டிருக்கின்றனர். 

மாரியம்மாளிடம், "இது தெருவா? ஒதுக்குபுறமான இடமா?" என்ற கேள்விக்கு மலத்தை அள்ளிக் கொண்டே சொல்கிறார்: 

"தெருதாங்க, ஆனா இந்த இடத்த கக்கூசா ஆக்கிட்டாங்க..." 

மாநகராட்சி பொது மக்களுக்காக சில கழிப்பிடங்கள் கட்டி கொடுத்திருந்தும் பொது மக்கள் அதை உபயோகிப்பதில்லை. காற்றுவெளியில் போவதே சுகம் என்று செம்புடன் இங்கு வந்துவிடுகின்றனர். 

20-வருடங்களாக மலம் அள்ளும் வேலையில் இருக்கிற மாரியம்மாள் குடும்பம் பற்றி விசாரித்த போது இறந்து போன கணவன். கல்வி அறிவு இல்லை! குழந்தைகளுக்காக இந்த வேலையை செய்வதாக சொல்கிறார். அதற்கான சம்பளம் மாதம் ரூ 3000. 

"மலம் அள்ள தேவையான உபகரணங்கள் கை உறைகள் ஏதாவது மாநகராட்சி தருகின்றதா?" என்ற கேள்விக்கு.... 

"அதெல்லாம் ஒன்னுமில்லங்க, இந்த பிளாஸ்டிக் வாலிதான் அவுக குடுத்தாங்க... சாம்பலு, தகடு எல்லாம் என்னோடதுங்க....." 

பேசிக் கொண்ட வேலையில் ஈடுபட்டிருந்த மாரியம்மாவின் வாளியில் மலம் ரொம்பிப் போய்விடுகிறது. அந்த வாளியை மாரியம்மாள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு தெரு ஓரத்தில் மாநகராட்சி வண்டியில் இருக்கும் ஆணிடம் போய்க் கொடுக்கிறார். 

நினைத்துப் பாருங்கள்! படிக்கும் போதே குமட்டலும், அருவெறுப்புமாக இருக்கிறது. சுதந்திரம் கிடைத்த 60-வருடங்களுக்கு பிறகும் கீழ்சாதியும், அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இழிவான வேலைகளும், அதற்கான குறைந்த மாத வருமானமும், அவர்களை எந்த அளவுக்கு சமூகம் புறக்கணித்து வைத்திருக்கிறது என்பதை உங்களால் ஜீரணித்துக் கொள்ள முடிகிறதா? 

சிலர் சொல்லலாம், தலீத் மக்கள் அவர்கள் சூழ்நிலையில் இருந்து அவர்கள் தான் மீண்டு வர அதற்கான முயற்சிகள் எடுக்க வேண்டும். பாடுபட வேண்டும். அவர்களின் இழிநிலை ஒழிய கல்வி அறிவு வேண்டும் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். நீங்கள் நினைக்கிறீர்களா? எளிதில் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை அவர்கள் மாற்ற உயர்வர்க்கத்தினர் விட்டு விடுவார்களா? 

சமீபத்தில் நடந்த சம்பவங்கள் தலீத் மக்களின் முன்னேற்றத்தை ஏற்றுக் கொள்ள இயலாவண்ணம் இருக்கிறது என்பதற்கு சிறு சான்றுகள் தான் ´´ஜாட்" சம்பவம். 

தாழ்த்தப்பட்டோரின் குடியிருப்புகளில் இருந்த இரண்டு சக்கர வாகனங்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள், சமையல் எரிவாயு சாதனங்கள், நவீன மின்னணுக் கருவிகள் மற்றும் கணிப்பொறிகள் ஆகியவற்றைக் கூச்சமின்றிக் கொள்ளையடித்ததோடு, மாடி வீடுகளை தூக்கிச் செல்லமுடியவில்லையே என்ற ஆத்திரத்தில் அவற்றுக்குள் இருந்த மரச்சாமான்களையும் சேர்த்து தீ வைத்தது. 

´என்ன இது?´ தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் குடிசை என்றால், சட்டியும், பானையும், சாம்பல் அடுப்பும்தானே இருக்கும்? ஆனால், இங்கு சலவை இயந்திரங்கள், கணிப்பொறிகள் மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் இவற்றோடு அழகான மாடி வீடுகள் கட்டிக் கொண்டு கீழ்சாதிக் கூட்டம் வசிப்பதா? அவர்கள் அனுபவிக்க நாம் வேடிக்கைப் பார்ப்பதா? மலத்தைச் சுமக்கும் தோட்டி கும்பல் மச்சு வீட்டில் வாழ்வதா?" என்ற உயர்சாதி கொழுப்பு ஜாட் சாதிவெறியர்களிடம் கொழுந்து விட்டு எரிந்தது. 

விளைவு தலித் மக்களின் 50-ஆண்டுகால ரத்தமும், வேர்வையும், கனவும், உழைப்பும் வெறும் அரைமணி நேரத்தில் ஜாட் சாதிவெறிக் கும்பலால் சாம்பல் மேடாக்கப்பட்டது. 

தாழ்த்தப்பட்ட மக்களின் சுயமரியாதை தன்மானத்தின் குறியீடாக நிமிர்ந்து நின்ற அவர்களின் மாடி வீடுகளை ஜாட் சாதிவெறிக் கும்பல் குறிவைத்துத் தகர்த்தது. 

"மாடி வீட்டில் வாழும் அவர்கள் தங்களைத் தலித்துகள் என்று ஏன் இன்னும் கூறிக் கொள்கிறார்கள்?" என்று, தாழ்த்தப்பட்டோரைச் சக மனிதர்கள் என்று ஏற்றுக் கொள்ளவே மனம் ஒப்பாமல் பொருமுகிறார்கள் ´கோஹனா´ நகர நடுத்தர வர்க்கத்தினர். இதில் ஜாட் சாதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற முன்னாள் பள்ளி ஆசிரியர் முதல் சிறுகடை வியாபாரிகள் வரை பலரும் அடக்கம். 

தாழ்த்தப்பட்டோர் மீது நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டத்தையும் அவர்கள் குடியிருப்புகள் கொளுத்தப்பட்டதையும் "தவிர்க்க முடியாதது", ´வேறு வழியில்லை" என்று வக்காலத்து வாங்கி வக்கிரமாக தங்கள் மகிழ்ச்சியை மறைமுகமாக வெளிப்படுத்துகிறார்கள். அந்த அளவு சாதி இந்துக்களிடம் தாழ்த்தப்பட்டோர் மீதான வெறுப்பு உயர்சாதி திமிராக அருவருப்பாக வழிகிறது. 

´கோஹனா சம்பவம்´ இந்து சாதிவெறியர்களுக்கு எதிராக ஒரே ஒரு தாழ்த்தப்பட்டவர் போராட்டத்தில் இறங்கினாலும் உடனடியாக அடிமைக்கால தண்டனைகளை ஏவி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை மொத்தமாகப் பழிதீர்க்கிறார்கள், உயர்சாதி வெறியர்கள். 

இதற்கு சமீபத்திய உதாரணம், ஒரிசா மாநிலத்தில் பூரி மாவட்டம், புபன்பதி என்ற கிராமத்தில் செப்டம்பர் 19-ந் தேதி நடந்த குரூரம்! கண்டாயித் என்ற இந்து ஆதிக்கச்சாதி திருமணத்தில் மாப்பிள்ளையின் காலை கழுவும் அடிமை வேலையை செய்ய மறுத்த தாழ்த்தப்பட்டோரைத் தண்டிக்க, அக்கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட பெண்கள் அனைவரையும் நிர்வாணமாக்கி நடத்திச் சென்றனர் இந்து சாதிவெறியர்கள். ஆட்சி அதிகாரத்தை அதன் அடிவரை சுவைக்கும் ஆதிக்க சாதிவெறியர்களுக்கு தாழ்த்தப்பட்டோர் மனிதர்களே அல்ல! 

எனவே, சக மனிதர்கள் அனுபவிக்கும் எந்த உரிமையும் அவர்களுக்கு இல்லை. அதுமட்டுமல்ல, இந்திய அரசியல் சட்டம் வழங்கும் இடஒதுக்கீட்டு ´சலுகை´கள் கூட அவர்கள் அனுபவிப்பதை மேல்சாதி வெறியர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 

´கோஹனா´ நகரத்தின் வர்த்தக மையத்தில் மாடி வீட்டில் வாழ்ந்து கொண்டு, கலர் டி.வி. பார்த்துக் கொண்டு, மோட்டார் பைக்கில் பறந்து கொண்டு, "லேப்டாப்´ கம்ப்யூட்டரைத் தட்டிக் கொண்டு, கூடவே தங்களை ´தலித்" என்று கூறிக் கொண்டு இடஒதுக்கீட்டைப் பெற்று அரசு வேலையில் சேர்ந்து விடுகிறார்கள். சமயத்தில் வெளி நாட்டுக்கும் பறந்து விடுகிறார்கள் என்ற "பொச்சரிப்பை´ பரப்பித் தான் தாழ்த்தப்பட்டோரின் சொற்ப சொத்துக்களையும் தீவைத்து கொளுத்தினார்கள், ஜாட் சாதிவெறியர்கள். 

ஆனால், கோஹனா நகரத்து தலித்துகள், சினிமா கழிசடைகள் போன்றோ, ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகள் போன்றோ அல்லது கந்துவட்டி, மணல் திருட்டு, கள்ளச்சாராயம் காய்ச்சும் திடீர் பணக்கார பொறுக்கிகள் போன்ற கூட்டம் அல்ல. 

கடந்த 50- ஆண்டுகளுக்கும் மேலாக அந்நகரத்தில் அவர்கள் செலுத்திய கடுமையான உழைப்பும், கட்டுப்பாடான வாழ்க்கை முறையும் தங்களின் குழந்தைகளின் கல்விக்காகவும், எதிர்கால வாழ்க்கைக்காகவும், மிக நீண்டகாலத்திற்குத் திட்டமிடும் அவர்கள் பாங்கும் அவர்களை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. பணம் படைத்த ஜாட் ஆதிக்க சாதி கும்பல்களே இவர்களைக் கண்டு மிரளும் அளவுக்கு தங்களுக்குள் ஒன்றுபட்டு, பலம் பொருந்திய அமைப்பாக திரண்டு ஜாட் ஆதிக்க சாதியினரின் ஒடுக்குமுறைகளை முளையிலேயே கிள்ளி எறிகிறார்கள். 

இங்கு ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரு தலைமுறை நபர்களும் ஒரு படி முன்னேற்றத்தில் நிற்கிறார்கள். தாத்தா, நகராட்சியில் தெரு கூட்டுபவர்; அப்பா, ரயில்வேயில் எழுத்தர்; மகன், எம்.சி.ஏ., மாணவன், கூடுதலாக பகுதி நேர வேலையில் வருமானம். பிள்ளைகள் பெரும்பாலும் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்களாகவும், ஏதாவது ஒரு தொழிற்பயிற்சியில் தேர்ச்சி அடைந்தவர்களாகவும் வளர்கிறார்கள். தாத்தா பார்க்கும் தெருக்கூட்டும் வேலையை வரும் தலைமுறையினர் இனிமேலும் தொடரக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். 

தாழ்த்தப்பட்டோர் என்றால் உதிரிகள், தலைசொரிந்து நின்று மீதம் மிச்சத்தை வாங்கிக் கொள்பவர்கள், பிறரின் கருணைக்கு ஏங்குபவர்கள் என்ற ஆதிக்க சாதியினரின் சித்திரத்தை நிர்மூலமாக்குகிறார்கள். 

கோஹனா நகரத்தில் உருக்கு போன்ற அமைப்பாக திரண்டு இருக்கும் உழைக்கும் தாழ்த்தப்பட்டோரைக் கண்டு தீக்குள் விரலை விட்டவர்கள் போல் நடுங்குகிறார்கள், ஜாட் ஆதிக்க சாதிவெறியர்கள். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவதும் ஏவிய வேலையை செய்து முடிப்பதும் அதிகபட்சம் போனால், ஆடுமாடுகள் போல் அடிமை வேலைக்குப் படைக்கப்பட்டவர்கள் தான் ´தாழ்த்தப்பட்டோர்" என்ற உயர்சாதி திமிர் கோஹனா நகரத்து தாழ்த்தப்பட்டோரிடம் செல்லுபடியாகவில்லை. 

"கோஹனா நகரத்து" தாழ்த்தப்பட்டோர் வளமான எதிர்காலத்தைப் பற்றி கனவுகள் காண்பது குற்றம்! அவர்களுக்கு சொத்துக்கள் இருப்பது குற்றம் ´அவர்களுக்கு சுயமரியாதை தன்மானம் இருந்தால் பெருங்குற்றம்! அவர்கள் மனிதர்களாக அல்ல, மனிதர்கள் மாதிரி நடந்துக் கொண்டாலே அது மன்னிக்க முடியாத குற்றம்!" என்று கொக்கரிக்கிறது, ஜாட் ஆதிக்க சாதிவெறி கும்பல். இன்று நேற்றல்ல. இரண்டாயிரம் ஆண்டுகாலமாக இந்த உயர்சாதி இறுமாப்பில்தான் தாழ்த்தப்பட்டோரைக் கொளுத்திக் கொண்டிருக்கிறார்கள் ஆதிக்க இந்துசாதி வெறியர்கள். (நன்றி: ´புதிய ஜனநாயகம்´)

கோகாத் சம்பவம்: கோகாத், மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமம். இங்கே வால்மிகி என்ற சாதி பிரிவினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் சாதி அமைப்பு முக்கோணத்தின் அடிமட்டத்தில் இருக்கும் மக்கள். அதாவது தாழ்த்தபட்ட மக்கள். இவர்கள், கிட்டதட்ட அடிமை போன்று உயர்சாதியினரின் மலத்தை தினமும் அள்ள வேண்டும். இவர்கள் வேறு ஏந்த வேலைக்கும் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இதில் மிகப் பெரிய கொடுமை என்னவென்றால், இதற்கு அவர்கள் பெறும் ஊழியம் ஒரு மாதத்திற்கு வெறும் ரூ 20. அதே வீட்டில் உணவிற்காக கையேந்தி நிற்க வேண்டும். 

இது சம்பந்தமாக உயர்சாதியினர் ஒருவர் கூறியது "இந்த வேலையை அவர்கள்தான் செய்ய வேண்டும். அவர்கள் செய்யவில்லை என்றால் யார் செய்வது?" என்றார். 

இது போன்று வால்மீகி சாதியினர் மலம் அள்ளுவதால் அவர்களை மற்றவர்கள் தீண்ட மறுக்கின்றனர். அதாவது முடிதிருத்தம் செய்வோர், அவர்களுக்கு முடிதிருத்தம் செய்ய மறுகின்றனர். இதனால் அவர்கள் முடிதிருத்தம் செய்ய சுமார் 20 கி.மீ. செல்ல வேண்டியுள்ளது.

"இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி பிரிவு 15-ல் "எந்த மனிதரையும் சாதி அடிப்படையில் பேதம் காட்டக்கூடாது. எல்லா மனிதர்களும் பொது இடத்திற்கு செல்ல அனுமதி பெற்றவர்கள்". 

இருப்பினும் இதை நடைமுறைப்படுத்துவதில் இன்னும் பல சவால்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கு வால்மிகி சாதியினர் ஒரு சாட்சி. இந்த வால்மிகி சாதியினர் பொது இடத்தில் தண்ணீர் எடுக்கவோ, கடவுள் இருக்குமிடத்திற்கு செல்லவோ முடியாது. டீ கடை, உணவகங்களில் இவர்களுக்கு தனி பாத்திரங்களில் தான் எல்லாம் பரிமாறப்படுகிறது. 

பகவதி பிராசாத் குமார் என்ற பிராமணர் கூறுகையில், "நாங்கள் பல வருடங்களாக மதச் சடங்குகள், பூஜைகள் செய்து வருகிறோம். ஆனால் நாங்கள் வால்மிகி சாதியினருடன் அமர்ந்து உணவு உட்கொள்ளும் தவறை இது வரை செய்ததில்லை." என்றார். 

2003-ம் வருடம் மத்திய பிரதேச அரசாங்கம், "அனைத்து மலம்களிக்கும் இடத்தை பொது சாக்கடையில் கலக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றது. ஆனால் இதுவரை அது நடக்கவில்லை. இன்னும் வால்மிகி சாதியினர்தான், மலம் அள்ளுகின்றனர். 

சுமார் 20-வருடங்களாக இது போன்று மலம் அள்ளும் சுதா என்ற பெண், அதன்துருநாற்றத்தினால் மூச்சு திணறல் நோய், ஆஸ்துமா, டிபி மற்றும் மஞ்சக்காமலையால் அவதிப்படுகிறார். இது போன்று கிட்டதட்ட மலம் அள்ளும் அனைவரும் அவதிப்படுகின்றனர். 

மேலும், மலம் அள்ளும் ஒருவர், 

"என்னால் மலத்தை தினமும் பார்க்க முடியவில்லை. அதன் துருநாற்றத்தினால் என்க்கு தூக்கம் வருவதில்லை. அதனால் மது அருந்தினால்தான் தூக்கம் வருகிறது." என்கிறார்.

இதில், பூரி என்ற மற்றொரு பெண், திருமணம் முடிந்து சுமார் 10- வருடங்களாக இதை செய்வதாகவும், முதலில் மிகவும் கடினமாக இருந்ததாகவும் அதனால் வாந்தி எடுத்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் அது நாளைடைவில் பழகிவிட்டதாகவும் கூறியுள்ளார். 

இப்படிப்பட்ட கொடுரங்களையெல்லாம் பார்த்துக் கொண்டு இந்த அரசியல்வாதிகள் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள்? மலம் அள்ளும் தொழிலை புனிதமாக கருதவேண்டும் என்று சொன்ன காந்திக்கு மகாத்மா பட்டம் கொடுத்து பெருமைப்படுத்திய நாடல்லவா? அந்த மகாத்மாவுக்கே புனித தொழிலாக தெரிந்த போது இந்நாள் அரசியல்வாதி என்ன செய்திருப்பான் என்பதற்கு குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி நல்ல உதாரணம். 

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஓர் புத்தகம் எழுதியுள்ளார். அந்தப் புத்தகத் தின் பெயர் "கர்மயோக்". அந்த நூலை நரேந்திரமோடி தனிப்பட்ட முறையில் வெளியிடவில்லை. குஜராத் மாநில அரசின் செய்தித் துறையே கர்மயோக் என்ற அந்த நூலை வெளியிட்டுள்ளதுதான் மிகக் கேவலமான ஒரு கொடுமையான நிலையாகும். அந்த நூலில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை எப்படிக் கேவலப்படுத்தி எழுதியிருக்கின்றார்கள் என்றால், 

"மலம் அள்ளுவது, சாக்கடைகளையும், குப்பைகளையும் அகற்றும் பணியில் ஈடுபடுவோர் யோக நிலையை அடைவார்கள். அந்த பணியை செய்வோர்கள் ஒன்றை எண்ணிப் பார்க்க வேண்டும். அந்தப் பணியை அவர்கள் கடமையாகச் செய்வதன் மூலம் ஒட்டுமொத்மான சமூகத்திற்கும், கடவுள்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கின்றனர் என்று ஒடுக்கப்பட்ட மக்களின் நாக்கில் தேன் தடவுவது போன்ற ஒரு செய்தியை எழுதியிருக்கின்றார். 

வருணாசிரமக் கோட்பாடுகளை ஊக்குவிக்கும்படி இருந்த நரேந்திர மோடிக்கு தமிழகத்தின் திராவிட கழக தலைவர் கி. வீரமணி அவர்களும், தலீத் தலைவர் திருமா அவர்களும் எதிர்ப்பு தெரிவித்து புத்தகத்தின் நகல்களை எரித்து போராட்டம் செய்தனர்.

இந்தியாவில் வருணாசிரமக்கோட்பாட்டுக்குள் இந்திய அரசியல்வாதிகளும் சட்டமும் துணைப்போவதால் மனிதனை ஜாதியை வைத்து இழிபடுத்தி இழிவான வேலைகளை அவர்களுக்கென்று ஒதுக்குவது எந்தவிதத்தில் நியாயமாகும்? 

ஒருசில தனிமனிதர்களின் போராட்டத்தினாலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களினாலும் மட்டுமே சில முறை முன்னேற்றம் கண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு கோலார் தங்க சுரங்கத்தில் நடந்த கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களுக்கு நடந்த அக்கிரமங்களை ஒழித்துக் கட்டியது. 

இந்தியா முழுக்க துப்புரவு தொழிலாளர்கள் 6.76-இலட்சம் பேர் உள்ளனர். தலையில் மலத்தை சுமந்து செல்லக் கூடிய இழிவான நிலையில் இருக்கிறார்கள். நவீன கழிப்பிடம் 96-லட்சம் கட்டப்பட்டிருக்கிறது. சாக்கடை அள்ளி இறந்தோர் 22,000-பேர் மலம் கழிவு நீர் உள்ள பகுதியில் இன்றைக்கும் இறங்கி சுத்தம் செய்கிறவர்கள் எங்களுடைய சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். சாக்கடைக்குள்ளே இறங்கி விஷ வாயு தாக்கி இறந்த எங் களுடைய தோழர்களுடைய எண்ணிக்கை மட்டும் 22,327 பேர். மலத்தையும் தலையில் சுமக்கிறார்கள். மரணத்தையும் தலையில் சுமக்கிறார்கள். மதுரை மாநகராட்சியில் மட்டும் 2700-முழு நேர சுகாதாரப் பணியாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்களில் 90-விழுக்காட்டுக்கும் மேற்பட்டவர்கள் தலித்துகள். 35-விழுக்காடு பெண்கள். 

இந்தியா சுதந்திரம் அடைந்து 60-ஆண்டுகள் சென்ற போதிலும் பாதாள சாக்கடை போடப்படாத பல ஆண்டுகளுக்கு முன் திறந்த கழி வறைகள் கட்டப்பட்டு வந்தன. அதில் சேரும் மலத்தை கையால் அள்ளி சுமந்து செல்லும் நிலை இருந்தது. 20-ஆண்டுகளுக்கு முன்னால் திறந்த வெளி கழிப்பிடங்கள் கட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டது. கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டமும் தீட்டப்பட்டது. டில்லியிலும் 1987-ஆம் ஆண்டு கையால் மலம் அள்ளுவதற்கு தடை போடப்பட்டது. 

ஆனால் சமீபத்தில் எடுத்த கணக்கின்படி (2008) 1000-பேர் மலம் அள்ளும் பணியில் இன்னமும் இருப்பதாக கணக்கெடுப்பு சொல்கிறது. அப்பகுதிகளை அடையாளம் கண்டுபிடித்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அரசு அதிகாரிகளிடம் அகு குறித்து கூறியபோது இதுவரையில் கையால் மலம் அள்ளுபவர்களைக் குறித்து எந்த புகாரும் வரவில்லை என்றும் 
தெரிவித்தினர். 

மலம் அள்ளும் கொடுமையான தொழிலை அரசு ஒழித்துக் கட்ட முயற்சி செய்தாலும் சிலர் திட்டமிட்டு பின்பற்றி வருவதாக சொல்லப்படுகின்றது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு 8000-பேர் கையால் மலம் அள்ளும் வேலை செய்ததாகவும், தற்போது 1000-பேர் மட்டும் இருப்பதையும் ஒட்டு மொத்தமாக ஒழித்துக் கட்ட வேண்டும் என்று சேவை நிறுவனங்கள் முழு மூச்சுடன் செயல்படுகின்றன. 

உங்களுக்கும் மலம் அள்ளும் தொழிலாளர்களை கண்டால் தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்கு தகவல் கொடுங்கள். அத்தொழிலாளி காப்பாற்றப்பட வேண்டியவர். 


தமிழச்சி 
30/15/2008

 

தலித் மக்கள் மீது காவல்துறை பாதுகாப்புடன் நிகழ்த்தப்பட்ட அராஜகம்!

__10


சென்னையின் மையப்பகுதியில் இருக்கும் கண்ணப்பர் திடலில் தலித் மக்களின் குடியிறுப்பு பகுதிகள் சதி திட்டத்தால் தீ வைத்து கொளுத்தப்பட்டிருக்கிறது. ஏற்கனவே ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபின் சென்னை நகரில் மட்டும் கேசவன் பூங்காவில் 300 குடிசைகள், சென்னை வண்ணாரப்பேட்டையில் 850 குடிசைகள், சென்னை கண்ணப்பர் திடலில் 680 குடிசைகள் தீ விபத்தில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. (சேலம் வாழப்பாடியிலும் அருந்ததியர் குடியிருப்புகள் தீ விபத்தில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. வெளியில் தெரியாத சம்பவங்கள் கணக்கில் இல்லை)

இந்நிலையிலேயே சென்னை கண்ணப்பர் திடலில் உள்ள 'திடீர் நகர்' பகுதியில் 650 குடிசைகள் சதி திட்டத்தால் முற்றாக அழிக்கப்பட்டிருக்கிறது என்ற தகவல் நமக்கு கிடைத்தது. நமது தோழர் ஒருவர் உண்மையை அறியும் பொருட்டு பாதிக்கப்பட்ட மக்கள் குடியிறுப்பு பகுதிக்கு சென்று மக்களிடம் தகவல்களை சேகரித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்மணி ஒருவர் நம்மிடம் நடந்த சம்பவங்களை விளக்கினார்:

"17 வருஷங்களா இங்க இருக்கோம். இதுவரை யாரும் வந்து எங்களை பயமுறுத்தியது கிடையாது. ரெண்டு வாரத்துக்கு முன்ன (07.07.2011) தீயணைப்பு துறையை சார்த்த இரண்டு பேர் வந்து, 'இதுக்குள்ள நீங்க இருக்காதிங்கமா. உங்க கிட்ட இன்னா இன்னா அத்தாட்சி இருக்கிறதோ எல்லாத்தையும் எடுத்துக்கோங்க'ன்னு சொன்னாரு. 'எதுக்கு சார் இதையெல்லாம் எங்க கிட்ட சொல்றிங்கோ'ன்னு கேட்டேன். 'இல்ல இந்த இடத்தை பத்தவைக்க போறாங்க'ன்னு சொல்லிட்டு இரண்டு பேரும் போயிட்டாங்க.

அப்பறம் அன்னிக்கே போலிசுக்கு போய் விவரத்தை சொன்னோம். அவங்க நம்பல. எதுக்கும் நாங்க புகார் கொடுக்கறோம்னு சொன்னோம். உடனே போலிசுக்காரங்க, 'யாராவது வதந்தியா பேசறதை எல்லாம் நம்பி பிராது குடுக்காதிங்கன்னு' எங்களை திட்டினாங்க. இருந்தாலும் நாங்க கம்ளைண்ட் கொடுக்கறோம்னு சொன்னோம். அப்பவும் அவங்க ஏத்துக்கல.

எங்க ஜனங்க தொடர்ந்து புகார் கொடுக்கப் போறோம்முன்னு வலியுறுத்தியதால உதவி ஆணையர் (AC), போலிஸ்காரங்களோடு (G2 police station - காவல் நிலையம், பெரியமேடு) எங்க இடத்துக்கு விசாரிக்கிறதா சொல்லிட்டு வந்தாங்க.

உதவி ஆணையர் (AC) எங்களுக்கு முன்னாடியே தீயணைப்பு நிர்வாகத்துக்கு போன் செய்து, 'யாரு வந்து எச்சரிக்கை செய்தாங்க'ன்னு விசாரிச்சாங்க. 'சாப்பாடு செய்திட்டிருந்த போது நெருப்பு கூரையில் பத்திக்கப் போவுதுன்னுதான் சொல்லிருக்காங்க'ன்னு ஏதோ சொல்லி சமாளிச்சிட்டாங்க. உடனே போலிஸ்காரங்க யாரோ பொய் சொல்லி இருக்காங்க போல. உங்களுக்கு எதுவும் நடக்காது. நாங்க பார்த்துக்கறோம்னு சமாதானம் சொல்லிட்டு போயிட்டாங்க.

ஆனால் தீயணைப்பு வீரர் வந்து சென்ற 5வது நாள் (12.07.2011 காலை 11.00 மணியளவில்) பக்கத்துல இருந்த 160 குடிசைங்க பத்திக்கிச்சி. ஒண்ணுமே செய்ய முடியல. வீட்டுல இருந்த பெரியவங்க எல்லாரும் வேலைக்கு போன நேரம். இந்தப்பக்கமா இருந்த சில பசங்க வீட்டுகிட்ட இருக்கிற குட்டையில இருந்து தண்ணீ எடுத்துட்டுவந்து ஊத்தினாங்க. தீயணைப்பு நிர்வாகத்துக்கும் போன் செய்து சொன்னோம். அவங்க லேட்டா வந்தாங்க. சின்ன சந்தா இருக்கிறதால வண்டி உள்ள வரமுடியலைன்னு வெளியேவே நின்னுட்டாங்க. தீ பரவாமல் நாங்க தண்ணி அடிச்சி நிறுத்திட்டோம். இருந்தாலும் 130 குடிசைங்க முழுதும் எரிஞ்சு போச்சு.

நாங்க தீயணைப்பு ஆளுங்க வந்து சொன்ன மாதிரியே நெருப்பு புடிச்சிக்குச்சேன்னு தீ விபத்து நடந்த அன்றே (12.07.2011) போலிசுக்கு போய் முறையீடு பண்ணோம். உடனே காவல்துறையினர் எங்க பக்கத்துக்கு வந்து விசாரணை பண்ணாங்க. அப்ப தே.மு.க எம்.எல்.ஏ நல்லதம்பியும் வந்திருந்தாரு. அவரு போலிஸ்காரங்களிடம், 'யாரு நெருப்பு வச்சதுன்னு விசாரணை பண்ணுங்க'ன்னு கண்டிக்கிற மாதிரி சொசொல்லிட்டு போய்டாரு.

யாரும் எங்களோட பிரச்சனையின் தீவிரத்தை உணரல. அதனால அடுத்த நாள் (13.07.2011) சைடஹாம்ஸ் சாலையில் (மூர்மார்க்கட்) பகல் 12 மணிக்கு மறியல் பண்ணோம். போலிசுங்க வந்து எங்களை சமாதானப்படுத்தினாங்க. 'மறியல் பண்ணாதிங்க. நாங்க நடவடிக்கை எடுக்கறோம்'னு சொன்னாங்க. நாங்க அசரல. அப்பறம் மாநகர ஆட்சியாளரு வந்தாரு. அரசு நிவாரணத்திற்கு ஏற்பாடு பண்றதா சொன்னாரு.

நாங்க என்ன ஏற்பாடு பண்ணுவீங்கன்னு கேட்டோம். அரிசி, பருப்பு, துணி, பணத்துக்கு ஏற்பாடு செய்யறேன்னு சொன்னாரு. அதை வச்சிக்கிட்டு என்ன பண்றது? நாளு நாள் சாப்பிட முடியும். அப்பறம் என்ன செய்யறது. எங்க குடிசையெல்லாம் எரிஞ்சு நாசமா போச்சு. திரும்பவும் குடியிருப்பு பகுதிங்கள புதுப்பிச்சி கொடுங்கன்னு சொன்னோம். அதுக்கு அவரு 12 வருடங்களாக அந்த இடத்தில் நீங்கள் வாழ்ந்து இருந்தா குடியிறுப்பு பட்டா வாங்கி தருவதாக சொன்னாரு. நாங்க 'ஓட்டு உரிமை, ரேஷன் அட்டை 17 வருடங்கள் தங்கிருந்ததற்கான சான்றிதழ்கள் இருக்கிறது' என்று சொன்னோம்.

அதற்கு மாநகர ஆட்சியாளரு 'அத்தாட்சி பத்திரம் எடுத்துட்டு வந்து கொடுங்கள். குடியிறுப்பு பட்டாவுக்கு ஏற்பாடு பண்றேன். இப்ப மறியல் செய்யாதிங்க' என்று கேட்டுக் கொண்டார். நாங்களும் மறியல் செய்வதை நிறுத்திவிட்டு எங்க பகுதிக்கு வந்துட்டோம். அங்க போலிஸ் பாதுகாப்பும் போட்டிருந்தாங்க. அன்னிக்கு ராத்திரி முழுவதும் தூக்கம் இல்ல. பக்கத்துல இருக்கிற குளத்துல நிறைய பாம்புங்க இருக்கும். எங்க புள்ள குட்டிங்கள கொத்திடப் போவுதோன்னு விழிச்சிட்டு இருந்தோம்.

அடுத்த நாளு (14.07.2011) இரண்டாவது பகுதியில் ராத்திரி 1 மணிக்கு குடிசைகளுக்கு யாரோ தீ வச்சிட்டாங்க. பிள்ளைங்கல தூக்கிட்டு எல்லாரும் வெளியே வந்துட்டோம். அப்பவும் அங்க போலிசு இருந்தாங்க. நாங்க தீயணைக்க முயற்சி பண்ணோம். போலிசு சுத்தி வளைச்சி வச்சிக்கிட்டு யாரையும் உள்ளே விடல. இவங்க எங்க பாதுகாப்புக்கு வரல. நெருப்பு வச்சவனுக்கு பாதுகாப்பா இருக்கத்தான் வந்திருக்காங்கன்னு அப்பதான் புரிஞ்சுது.

எங்க சனங்க போலிசை பார்த்து கதறி அழுதாங்க. எங்களை உள்ளே போகவிடாமல் எங்க வீட்டையெல்லாம் எரிச்சி நாசம் பண்ண வச்சிட்டிங்களேன்னு கேட்டாங்க. போலிஸ்காரங்க பதிலுக்கு எங்கள திட்டினாங்க. பெரியமேடு சப் இன்ஸ்பெக்டர் (G2 police station - காவல் நிலையம், பெரியமேடு) எங்களை பார்த்து 'பறைச்சி'களுக்கு பங்களா கேட்குதான்னு ஏதேதோ கேவலமா பேசி திட்டினார்.

என்னய்யா பண்ணுவோம். 17 வருஷமா நாங்க வாழ்ந்த இடங்கையா இது. எங்க கண்ணு முன்னாலே எல்லாத்தையும் எரிச்சு நாசம் பண்ணிட்டாங்கையா. 650 குடிசைங்க முழுசும் எரிஞ்சு போச்சு. எல்லாரும் சேர்ந்து சதி பண்ணிட்டாங்கையா. இன்னும் 70 குடிசைங்க எரியாமல் இருக்கு. அதையும் சீக்கிரத்துல எரிச்சுடுவாங்க. எங்களுக்கு கேட்க நாதியில்லைன்னு இந்த அரசாங்கம் எங்களை என்ன பாடுபடுத்துன்னு பாருங்கையா.

பொடிசு, பொட்டுமா சின்ன புள்ளைங்களையெல்லாம் வச்சிட்டிருக்கோம் நாங்க. வேற எங்கையா போறது? 10 நாளுக்கு மேல போயிடுச்சி. இங்கத்தான் உறங்கறோம். இங்கதான் இன்னும் வாழறோம். ஆனா எந்த கட்சிக்காரங்களும் எங்களுக்கு உதவ வரலைங்க...."

கதறியபடியும், அரசு மீது அதிருப்தியாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவங்கள் முழுவதையும் நமக்கு தெரிவித்தார்கள்.

நாம் பாதிக்கப்பட்ட தலித் மக்களின் சார்பாக தமிழக அரசுக்கு சில கேள்விகள் :

1. 07.07.2011 - அன்று தீயணைப்பு துறையைச் சார்ந்த இரண்டு ஊழியர்கள் தீ வைக்கப்போகும் தகவல்களை முன்பேயே பொதுமக்களிடம் தெரிவித்திருக்கின்றனர். அன்றே அப்பகுதி மக்கள் G2 police station - காவல் நிலையம், பெரியமேடு சென்று புகார் கொடுக்க முயன்று அலட்சியப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

2. 12.07.2011 அன்று காலை 11.00 மணியளவில் அப்பகுதியில் 160 குடிசைகள் எரிக்கப்பட்டு முற்றாக அழிக்கப்பட்டிருக்கின்றன.

3. 14.07.2011 அன்று இரண்டாவது பகுதியில் இரவு 1 மணிக்கு தீ வைக்கப்பட்டு 650 குடிசைகள் முற்றாக எரிக்கப்பட்டிருக்கின்றன. பாதிக்கப்படாமல் இருக்கும் இன்னும் 70 குடிசைகளும் விரைவில் எரிக்கப்படலாம் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட மக்கள்.

---> மேற்காட்டப்பட்ட சம்பவங்கள் மூலம் தலித் மக்களை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தும் நோக்கத்தோடு குடியிறுப்பு பகுதிகளுக்கு தீ வைக்கப்பட்ட சதிக்கு தமிழக அரசு உடந்தையாக இருக்கிறதா?

---> பெரியமேடு சப் இன்ஸ்பெக்டர் (G2 police station - காவல் நிலையம், தலித் மக்களை 'பறைச்சி' என்று இழிவுபடுத்தும் வாசகங்களால் கடுஞ்சொற்களை உபயோகித்திருக்கிறார். அரசு ஊழியர் ஒருவர் பொதுமக்களை ஜாதி பெயர் குறிப்பிட்டு இழிவுபடுத்துவது கடும் கண்டனத்திற்குரியது என்னும் பட்சத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

---> புறநகர் பகுதிகளில் 5 ஆண்டுகள் தொடர்ந்து வசிப்பவருக்கு குடியிருப்பு உரிமை (பட்டா) வழங்கப்படும் என்று ஜெயலலிதா முன்பு முதல்வராக இருந்தபோது அறிவித்திருந்தார். அதன் பின் தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது 3 வருடங்கள் இருந்தால் போதும். குடியிருக்கு உரிமை (பட்டா) வழங்கப்படும் என்று கருணாநிதி அறிவித்து சட்டமாக்கப்பட்டிருக்கும் நிலையில் மாவட்ட ஆட்சியாளர் 12 ஆண்டுகாலம் என்று குடியிறுப்பு உரிமை குறித்து பாதிக்கப்பட்ட மக்களிடம் தவறாக தகவல் தருவதன் உள்நோக்கம் என்ன?

---> இன்னமும் பாதிக்கப்பட்ட மக்கள் அப்பகுதியில் இருந்து எங்களை அப்புறப்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்கிறார்கள். எங்களுக்கு புழுத்துப் போன 2 கிலோ அரிசியும், பணமும், துணியும் வேண்டாம். இந்த அரசாங்கம்தான் எங்கள் குடியிறுப்பு பகுதிகளை சதி செய்து அழித்தது. அதனால் எங்கள் குடியிறுப்பு பகுதிகளை புதுப்பித்து தந்தால் போதும் என்கிறார்கள்.

தமிழக அரசு என்ன சொல்லப் போகிறது? அநீதி இழைத்த மக்களுக்காக என்ன செய்யப் போகிறது?

Dim lights Download

"உனது சுயராஜ்யத்திலே பிறவியின் பேரால் ஒரு கூட்டத்துக்கு ஒரு நீதியும், நாட்டுக்குரிய பெரும்பான்மையோரான சமூகத்துக்கு அநீதியாகவும் இருப்பது? இதற்குப் பெயர் ஜனநாயகமா? மக்கள் ஆட்சியா? - [பெரியார்]

தமிழச்சி
25.07.2011


 

இனவிடுதலை போராளி இரட்டைமலை சீனிவாசன்!


RettamalaiSrinivasan


"நான் செங்கற்பட்டு கிராமங்களிலொன்றில் 1860 ஆம் வருடம் பிறந்தேன். கோயம்புத்தூர் கலாசாலையில் நான் வாசித்த போது சுமார் 400 பிள்ளைகளில் 10 பேர் தவிர மற்றவர்கள் பிராமணர்கள். ஜாதிக் கோட்பாடுகள் மிகக் கடினமாய் கவனிக்கப்பட்டன. பிள்ளைகளிடம் சிநேகிதத்தால் ஜாதி, குடும்பம், இருப்பிடம் முதலானவைகளை தெரிந்து கொண்டால் அவர்கள் தாழ்வாக என்னை நடத்துவார்கள் என்று பயந்து, பள்ளிக்கு வெளியே எங்கேனும் வாசித்துக் கொண்டிருந்து, பள்ளி ஆரம்ப மணி அடித்த பிறகு வகுப்புக்குள் போவேன். வகுப்பு கலையும்போது என்னை மாணாக்கர்கள் ஒட்டாதபடி வீட்டுக்கு கடுகென நடந்து செல்வேன்" 

1939-இல் இரட்டைமலை சீனிவாசன் தன் வரலாற்றை தானே சுருக்கமாக எழுதி ”திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் ஜீவிய சரித்திர சுருக்கம்”என்ற பெயரில் 30பக்க நூல் ஒன்றை வெளியிட்டார். அதில் தனது மாணவர் பருவத்தில் நடந்த நிகழ்வுகளை குறித்து பதிவு செய்திருப்பதைத்தான் நீங்கள் வாசிக்கிறீர்கள். தீண்டாமை சமூகத்தில் எந்தளவுக்கு அக்காலத்தில் வீரியத்துடன் செயல்பட்டன என்பதற்கு இவை போன்ற நிகழ்வுகளின் மூலம் நாம் அவதானிக்க முடியும். 

இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளான ஜூலை 7ஆம் தேதியை அரசு விழாவாக அறிவித்து இருக்கின்றார். 152 ஆண்டுகளுக்கு பிறகு இன்றும் அரசாங்கத்தின் மரியாதைக்குரியவராக போற்றப்படும் இரட்டைமலை சீனிவாசன் யார்? அவருடைய சமூக பங்களிப்பு என்ன என்று இன்றைய தலைமுறை இளைஞர்கள் யோசிக்கலாம். தனது வாழ்க்கை முழுவதும் உரிமைப் போராட்டத்திற்காகவும் இன விடுதலைக்காகவும் போராடி சாதித்த மனிதராய் இன்றும் பேசப்படும் இரட்டைமலை சீனிவாசன் குறித்து சிறு அறிமுகத்துடன் சாதனைகளின் பட்டியலுக்கு செல்வோம்.

இன்று திராவிடம், திராவிடர் குறித்து சமூகத்தளத்திலும் அரசியல்தளத்திலும் பெரியாரின் கருத்தியல் ஆழமாய் பதிவு செய்யப்பட்டதற்கு முன்பே பெரியாருக்கு முன்னோடிகளாய் இருந்த எம்.சி.ராஜா, அயோத்தி தாசர், இரட்டை மலை சீனிவாசன் உட்பட அவர்கள் நெறிப்படுத்திய திராவிட சொல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

பொதுவாக பறையர், பள்ளர் போன்ற சாதி மக்களை ஈனப்பிறவிகளாய் பழிக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்ட சமூகத்தினராய் வைக்கப்பட்டிருந்த நிலையில் திராவிடம் என்பதை மொழி, இனம் என்னும் தளத்தைக் கடந்து சாதிபேதமற்ற சமூகம் என்னும் நிலையில் பொருள்படுத்தி பறையர், பள்ளர் என்ற பெயர் நீக்கப்பட்டு ஆதிதிராவிடர் என்ற பெயரை தாழத்தப்பட்ட மக்களின் முன்னோடிகளில் ஒருவரான எம்.சி.ராஜா என்பவரால் 20.01.1922இல் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு [அரசாயை எண்: 817] இரண்டு ஆண்களுக்கு பிறகும் ஆதிதிராவிடர் என்ற சொல் உபயோகப்படுத்தப்படாமல் பறையர், பள்ளர், பஞ்சமன் என்றே அரசுசார் நிறுவனங்களிலும் பல பத்திரப் பதிவு அலுவலகங்களிலும் பதிவு செய்யப்பட்டதை கண்டு இரட்டைமலை சீனிவாசன் கொதித்து 25.08.1924இல் சட்டசபையில் முறையிட்டார். அன்றைய முதல்வர் பனகல் அரசர்சட்ட நடவடிக்கைகளை கடுமையாக்கினார். அன்றிலிருந்து ஆதிதிராவிடர் என்று அரசு ஆணைகளில் கவனமாக கையாளப்பட்டன. 

1930-இல் லண்டனில் நடைப்பெற்ற முதல் வட்ட மேசை மாநாட்டில் டாக்டர் அம்பேத்கருடன் கலந்து கொண்டார். அப்போது தன்னுடைய கோர்ட் பாய்கெட்டில் "ராவ்சாகிப் ரெட்டமலை சீனிவாசன் பறையன் தீண்டப்படாதவன்" என பொறிக்கப்பட்ட அடையாள அட்டையை அணிந்திருந்தார். அவ்வாக்கியம் குறித்து சபையில் சலசலப்பு. அப்போது 5 ஆவது மன்னரிடம் உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்துகொண்டு மன்னரோடு கைகுலுக்கினார்கள். இரட்டைமலை சீனிவாசன் முன் மன்னர் கை குலுக்க வந்தபோது கை குலுக்க மறுத்து "நீங்கள் என்னை தொட்டால் தீட்டு உங்களுக்கு ஒட்டிக் கொள்ளும் என்ற நிலை இருகிறதே! நான் எப்படி உங்களுக்கு கை கொடுக்க முடியும்?" என கேட்டார். நெகிழ்ந்து போன மன்னர் இரட்டைமலை சீனிவாசனை இறுக்கி தழுவி அணைத்துக் கொண்டார். rettaimalai_seenivasan

நீங்கள் தற்போதைய சமூக நிலவரங்களுடன் இச்சம்பவத்தை பார்க்கும் போது இரட்டைமலை சீனிவாசனின் செயல் மிகைப்படுத்தப்பட்டதோ என்னும் ஐயப்பாடு ஏற்படலாம். காலச் சூழல்களின் மாற்றங்கள் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லையே!

ஓர் உதாரணத்திற்கு இந்நிகழ்வை பாருங்கள்.

வழக்கறிஞர் கல்வி முடித்திருந்த இரட்டைமலை சீனிவாசன் 1893 ஆம் ஆண்டு அக்டோபரில் “பறையன்” இதழை வெளியிட்டார். பறையன் ஏடு தொடங்கப்பட்டு முதல் இதழ் வெளியிடப்பட்டவுடன் அதன் பிரதி ஒன்று மதிப்புரைக்காக “சுதேசமித்திரன்” பத்திரிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது அப்பத்திரிகையின் ஆசிரியராக சி.ஆர். நரசிம்மன் என்ற பார்ப்பனர் இருந்தார். அவரது மேசையின் மேல் மதிப்புரைக்காக அனுப்பப்பட்டிருந்த “பறையன்” பத்திரிகை இருந்தது. அதனை அவர் கையில் எடுத்துப் பார்க்காமல் தொட்டு எழுதும் கட்டைப் பேனாவை குச்சி போல பிடித்து அதனைக் கொண்டு அப்பத்திரிகையைப் புரட்டிப் பார்த்தார் என்றால் நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்! 


ஆதி திராவிடர்களிலேயே முதன்முதலாக கல்லூரி படிப்பை முடித்தவர் இரட்டைமலை சீனிவாசன் பலருக்கு அறியாத தகவலாக இருக்கலாம். கல்வியின் முக்கியத்துவத்தை சிறுவயதிலேயே அவர் உணர்ந்திருந்ததால்தான் தன் சமூக மக்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து செல்லும் இடங்களில் எல்லாம் பேச முடிந்தது. மேலும் தாழ்த்தப்பட்டோர் கல்விக் கழகத்தை ஏற்படுத்தியதும் இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தமாய் இருக்கும்.

1927 வரை பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிட மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளவில்லை. 1928இல் தான் முதன்முறையாக ஆதித் திராவிட மாணவர்களுக்கு கதவு திறக்கப்பட்டது. இந்த முயற்சியில் ஈடுபட்டவரும் இரட்டைமலை சீனிவாசன் அவர்களே.

தனது இனத்தின் உரிமைளை பெற இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் சமூக போராட்டங்கள் கொடுமையாக இருந்தது. தாழ்த்தப்பட்டவன் தெருவில் நடப்பதற்கு போராட்டம் பொது கிணறுகளில் தண்ணீர் எடுக்கப் போராட்டம் கல்வி கற்க பள்ளிகளுக்குள் அனுமதிகோரி போராட்டம் என அடிப்படை உரிமைகளுக்காக இனபோராளியாய் வாழ்ந்த இரட்டைமலை சீனிவாசனை இன்று சந்ததியினர், "தாத்தா இரட்டைமலை சீனிவாசன்" என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.

இன்று தாத்தாவின் பிறந்ததினம். 


நம் முன்னோடிகள் பெற்றுத்தந்த உரிமைகளை நினைவு கூறுவோம். இன்னமும் தொடரும் உரிமை மறுப்புக்கான போராட்டங்களில் நம் தோழமைக்கு தோள் கொடுப்போம்! வென்றிடுவோம் இனவிடுதலையை!!!

தமிழச்சி
07.07.2011



 

வாழைப்பாடியில் அருந்ததியர் குடியிருப்பில் தீ விபத்து. நடந்தது என்ன?


"கிளி ஜோதிடர் குடியிருப்பில் தீ. 6 குடிசை வீடுகள் சாம்பல், 3 லட்சம் பொருட்கள் நாசம்! வாழைப்பாடியில் பரபரப்பு!!" இப்படித்தான் சிறிய அளவில் அந்த ஊடகம் [ஜூன் 13.06.2011] செய்தி வெளியிட்டிருந்தது.

பொதுவாகவே சாதிக் கலவரங்கள் நடைபெறும் போது, "இரு சாதிப் பிரிவினருக்கு இடையே நடைப்பெற்ற மோதலில்.." என்ற பொது வாக்கியத்தை ஊடகங்கள் கையாள்வது ஊடக மரபாக இருக்கிறது. ஆதிக்க சாதியினருக்கும் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கும் இடையே நடைப்பெறும் போராட்டமானது காலங்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கு எதிராக பொங்கி எழும் போராட்டமாகவே இதுவரை இருந்திருக்கின்றன. ஆனால் ஆதிக்க சாதிகளுக்கு ஆதரவாகவே அரசாங்கமும் ஊடகங்களும் செய்திகளை திரிபு செய்கின்றன. இதையே வாழைப்பாடி அருந்ததியினர் குடியிருப்பு தீ விபத்திலும் ஊடகம் கையாண்டிருக்கிறது.

"4வது வார்டு, அருந்ததியர் குடியிருப்பு, க.எண் 1 முதல் 51 முடிய" என்று அக்குடியிருப்பின் பெயர் பலகை கூறுகிறது. ஆனால் பத்திரிக்கை துறை, "கிளி ஜோசியர் குடியிருப்பு" என்கிறது. 


இனி அடுத்த நிகழ்வுகளுக்கு செல்வோம்.

Dim lights Embed Embed this video on your site

ஜூன் 13.06.2011 இல் அருந்ததியர் குடியிருப்பு தீ பிடித்து முற்றாக சேதம் அடைந்த பின் 21.06.2011 அன்று ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ பெருமாள் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 2.700 ரூபாய் வழங்கியதாக ஓர் நாளிதழ் தகவல் வெளியிட்டிருக்கின்றன. ஆனால் உண்மையில் குடும்பத்திற்கு 2500 ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் குறிப்பிடுகின்றனர். 


இங்கே இன்னொரு தகவலையும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

சென்னை சூளை அருகே கேசவன் பூங்காவில்29.05.2011 இல் ஏற்பட்ட தீ விபத்தில் 210 குடிசை வீடுகள் முழுவதும் தீ விபத்தால் சேதம் அடைந்த பின் தமிழக ஆளுனரின் கூட்டத் தொடரில் இனி தீ விபத்தில் சேதம் அடையும் குடிசைகளுக்கு போர் கால நிவாரணமாக உடனடியாக பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா 5000 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வந்ததை கவனப்படுத்துகிறோம். 


ஆனால் வாழைப்பாடி அருந்ததியினர் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டு முற்றாக உடைமைகள் இழந்து 9 நாட்களுக்கு பிறகே 2500 ரூபாய் மட்டுமே கொடுக்க்பபட்டிருக்கிறது. ஆனால் பத்திரிகை செய்தி 2700 ரூபாய் கொடுத்ததாக உள்ளது. முதல்வர் தீர்மானமோ 5000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்பட்ட நிவாரண உதவியில் கூட பணம் கையாடல் செய்யப்படுவதும், பாதிக்கப்பட்ட மக்களின் நிலையைக் குறித்து அப்பகுதி ஆட்சியாளர் (கலெக்டர்) அலட்சியமாய் இருப்பதும் ஏன்? 


நடந்த சம்பவம் குறித்து வாழைப்பாடி அருந்ததியினர் குடியிருப்பு மக்களிடம் விவாதிக்கையில் பலமுறை அப்பகுதியில் மின்கசிவு ஏற்பட்டதாகவும், மின்சாரத்துறை அலுவலகத்திற்கு சென்று பலமுறை புகார் செய்தும் அலட்சியப்படுத்தியதாலே இச்சம்பவம் நடந்தது என்று குறிப்பிடுகின்றார்கள். சம்பவம் நடைப்பெற்ற அன்று பக்கத்து தெருவில் ஒருவர் மரணம் அடைந்ததால் இப்பகுதியை சேர்ந்த மக்கள் அங்கு சென்றிருந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டனர். உடல் ஊனமுற்ற ஓர் இளம் பெண்ணிற்கு நடைபெற இருந்த திருமணமும் தடைபட்டிருக்கிறது. திருமண செலவுக்காக 50,000 ரூபாய் எடுத்து வீட்டில் வைத்திருந்ததாகவும் அவையும் தீயில் கருகிவிட்டன என்று அப்பெண்ணின் தந்தை குறிப்பிடுகிறார். 


இப்படி பல பாதிப்புக்களை ஏற்படுத்திய மின்கசிவும், மின்சாரதுறையின் அலட்சியமும் பாதிக்கப்பட்ட மக்களிடம் வள்ளல் குணத்தை காட்டிவிட்டு அதிலும் ஊழல் நடத்தி இருக்கும் அரசியல்வாதியும் பாதிக்கப்பட்ட மக்களின் குடியிருப்புக்குள் சென்று நேரடி விசாரணை செய்யாமல் ஒதுங்கி நின்று நோட்டம் விட்டுச் சென்ற அப்பகுதி கலெக்டரின் 'கடமை உணர்ச்சி'யையும் யார் கேள்வி கேட்பார்கள்?

மக்கள் பிரச்சனையை சாதி அடையாளத்தோடு தீண்டாமல் மக்கள் பிரச்சனையை இனி இந்த அரசாங்கமும் அரசு ஊழியர்களும் தீர்க்க முன்வருவார்களா? 


தமிழச்சி
03.07.2011




 
மேலதிகக் ஆக்கங்கள்...

பதிவுகள் தேதி வாரியாக

  • 2012 (5)
  • 2011 (146)
  • 2010 (23)
  • 2009 (18)
  • 2008 (5)
  • 2007 (1)
  • 2003 (1)
  • 1997 (1)
  • 1999 (1)
  • fbPixel