கனவும், நினைவும்!

பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 

"லட்சியக் கனவுகள் நட்சத்திரங்கள் போல்.
வானத்தில் மின்னி நமக்கு திசையை காட்டுகின்றன.
நட்சத்திரங்களை தொடர்ந்து செல்லும் போது
நாம் கீழே பார்த்து நடக்க வேண்டும்.
நாம் தரையின் மீது நடக்கிறோம் என்ற
உண்மையையும், நிதானத்தில் வைத்துக் கொள்ள
வேண்டியதாய் இருக்கிறது."

எதற்கும் ஒரு வரம்பு, ஒரு எல்லைக்கோடு இருக்க வேண்டும் என்பார்கள். நம் வாழ்க்கைக்கும் அப்படித்தான் எல்லாவற்றிலும் ஓர் எல்லைக்கோடு நமக்காக காத்திருக்கிறது.

உலக நடப்புகளும் சொல்லுகின்ற அடிப்படை உண்மைகளை, அனுபவங்களை புறக்கணிக்கவோ, ஜீரணிக்கவோ முடியாமல் இருக்கிறது. சகிப்பு தன்மையும், இயலாமையும், நொந்த மனமுமாய் பலநேரங்களில் என்ன வாழ்க்கைடா இது? என்னும் புலம்பல்கள்.

உலகில் இரண்டு வகையான மனிதர்கள் இருக்கிறார்களாம்....

ஒருவர் கனவுலகில் பறக்கும் லட்சியவாதிகள். அடுத்தவர்கள் மண்ணில் கால்பதிய நின்று எதையும் உலக நடப்புக் கண்ணோட்டத்தோடு செயலாற்றும் லட்சியவாதிகள் என்பார்கள்.

´Practical Persons´- இரண்டு வகையினரும் நாட்டுக்கு தேவைதான். இருப்பினும் செயல்பாடுகள் மட்டுமே அசாத்திய மாற்றத்தை சமூகத்தில் ஏற்படுத்துகிறது.

ரோமானிய சக்கரவர்த்தி ´மார்க்கஸ் அரேலியஸ்´ [marcus aurelius] பற்றி வரலாறுகளில் பார்க்கிறோம்.

தத்துவஞானமும், நடைமுறை ஞானமும் இணைந்து செயலாற்றிய லட்சிய மனிதன் அவன். நம் இந்தியாவில் கூட பல தீர்க்கதரசிகள் என்பவர்கள் இருந்திருக்கிறார்கள். பல தத்துவங்கள், ஞானங்கள், ஆயிரம் ஆயிரம் தத்துவ விளக்கங்கள் எல்லாமும்தான் கிடக்கின்றன. அதனால் சமூகத்திற்கு எந்த புண்ணியமாவது இருக்கிறதா?

´மனிதப் பண்புகள்´ என்று நியதி இருக்கிறது. இன்று வரையிலும் நம் சமூகம் அதைப்பற்றி யோசித்தது கூட கிடையாது. ஏன்? தீர்க்கதரிசிகளின் தத்துவங்கள் சமயத்தோடு பின்னிபிணைந்து குலாவி கொண்டிருப்பதா நம் அசட்டைக்கு காரணம்? எப்படி மனிதன் வாழக்கூடாது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உலக மக்களுக்கு முன்பு நமது கலாச்சாரம் தான் இளித்துக் கொண்டு நிற்கிறது.

மனிதர்களை வர்ணாசிரம அடிப்படையில் பிரித்து வைத்து தர்மம் என்கிறான். அந்த தர்மங்களைத்தான் நாம் சாகும் வரையில் இறுக்கிப் பிடித்துக் கொண்டு இருக்கிறோம். உலக மக்களின் சிந்தனைகளோடு யதார்த்தங்களை நோக்கி போகாமல் நமக்குள் சேஷ்ட்டைகளை செய்துக் கொண்டிருக்கிறோம். இதுவும் மனிதப்பண்புகளை ஒழித்த கனவு நிலைதான்.

சில தினங்களுக்கு முன்பு ´ஸ்லோகங்கள் நாசமாய் போகட்டும்´ பதிவைப் படித்த ஒருவர் மானவாரியாக கேள்வி கேட்டு மெயில் போட்டிருந்தார். விவாதிக்கலாம்; அருமையான சப்ஜெட்தான். முகம் தெரியாத ஒருவர். எங்கோ ஒளிந்துக் கொண்டு மனுதர்மத்திற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறார். இந்திய எல்லை வரைத்தான் அது மனுதர்மம். அதற்கு அப்பால் காட்டுமிராண்டித்தனம் என்னும் யதார்த்தங்கள் அதற்குள் இருப்பதை மனிதநேயம் மிக்கவர்களுக்கு தெரியாததா?

நடைமுறை வாழ்க்கைச் சிக்கல்கள் எவை? அதை எதனால் நம்மால் தீர்க்க முடிவதில்லை. நம்மால் ஏன் தீர்மாணிக்க முடிவதில்லை? நம்மால் ஏன் அதை அலட்சியப்படுத்திச் செல்ல முடிவதில்லை? நம் இயலாமையும் அறியாமையும் அணுசரித்து போகும் மனோபாவமும் தானே! அதன் மாற்றுக்கோணத்தை நாம் பார்க்க விரும்பாததால் தானே?

கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் என கணத்த இரும்பு சங்கிலிகள் பூட்டப்பட்ட உடலோடு ஆயுள் முழுவதும் பாரத்தை இழுத்து இழுத்து ஹீரோக்கள் ரோபோக்களை போல் வலம் வருகிறார்கள். இவர்கள் தான் நாளைய ரோபோக்கள்.

ரோமனிய சக்கரவர்த்தி மார்க்கஸ் அரேலியஸ் அலட்சிய சிரிப்போடு சொல்கிறார்: "எனக்கு அந்நாளைய வெத்துவாதங்கள் தேவையில்லை. நான் ஒரு பறவை போல, நீ இப்படித்தான் இது போல்தான் இப்படியாகத்தான் நடக்க வேண்டும் என்று போதிக்கத் தேவையில்லை. நான் மனிதனாக இருந்தாலே போதும்."

- தமிழச்சி
14/04/2009

பதிவுகள் தேதி வாரியாக

  • 2012 (5)
  • 2011 (146)
  • 2010 (23)
  • 2009 (18)
  • 2008 (5)
  • 2007 (1)
  • 2003 (1)
  • 1997 (1)
  • 1999 (1)
  • fbPixel